சென்னை ரோஜா முத்தையா நூலகத்திற்கு 35 ஆயிரம் டாலர்கள்! அமெரிக்கத் தமிழர்கள் நிதியுதவி!!

 
USA USA

சென்னையில் இயங்கி வரும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் புதிய கட்டிடத்திற்காக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் 35 ஆயிரத்து 175 டாலர்கள் நிதியுதவி வழங்கப்பட்டது. 

கடந்த பெரு வெள்ளத்தின் போது நூலகத்திற்குள் மழை வெள்ளம் புகுந்த காரணத்தினால் புதிய கட்டிடம் கட்டும் பணிக்காக சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 14வது ஆண்டு நிதியளிப்பு விழாவில் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 95 ஆயிரத்து 750 டாலர்கள் திரட்டப்பட்ட இந்த நிகழ்வில் மேலும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

Texas

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் உதவும் கரங்கள் அமைப்பிற்கு 15 ஆயிரம் டாலர்கள், சாய் அஷ்ரயா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை திட்டத்திற்கு 25 ஆயிரம் டாலர்கள், வடக்கு டெக்சாஸ் உணவு வங்கிக்கு 20 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி அளிக்கப்பட்டது.

இந்த விழாவில் முத்தான மூன்று கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. அன்னம் சரவணன் இயக்கத்தில் தமிழில் முதன் முலாக அரங்கேறிய நிழல் நாட்டிய நாடகம் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. ராஜேஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவான ஓலைச்சுவடியிலிருந்து இணையம் வரை நாடகம் தமிழ் மொழியின் தொன்மையையும், நவீன உலகத்திற்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொள்ளும் புதுமையையும் பறை சாற்றியது.

Texas

திக்கெட்டும் பரவட்டும் திருக்குறள் நடனத்தை வடிவமைத்து இயக்கி இருந்தார் ஹேமா ஞானவேல். சுமார் 70 குழந்தைகள் பங்கேற்ற இந்த கலைநிகழ்ச்சிகள் பல்சுவையுடன் பார்வையாளர்களுக்கு இனிய மாலை விருந்தாக அமைந்திருந்தது.

வடக்கு டெக்சாஸ் உணவு வங்கி மூலம் ஒரு மில்லியன் பேருக்கு உணவு வழங்கும் திட்டத்திற்காக சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் ஒரு லட்சம் டாலர்கள் நிதியுதவி உறுதியளிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது கட்டமாக இந்த ஆண்டு 20 ஆயிரம் டாலர்கள் வழஙகப்பட்டுள்ளதாக வேலு ராமன் தெரிவித்தார்.

நிதியளிப்பு விவரங்களையும் தொடர்புடைய திட்டங்களையும் ரம்யா வேலு எலாவர்த்தி எடுத்துரைத்தார். நிகழ்ச்சிகளை ராதிகா தொகுத்து வழங்கினார். வேலு ராமன், விசாலாட்சி வேலு நன்றியுரை ஆற்றினார்கள். சுமார் 50க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் விழாவுக்கான எற்பாடுகளை செய்திருந்தனர்.

From around the web