விமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரண பொருட்கள்.. பொதுமக்கள் 5 பேர் பரிதாப பலி.. பாரசூட் திறக்காததால் விபரீதம்!

 
Gaza

காசாவில் விமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரண பொருட்கள் பாரசூட் திறக்காததால் பொதுமக்கள் மீது விழுந்ததில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கடந்த 16 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன், 250 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.  இதனால், பாலஸ்தீனர்களின் மொத்த உயிரிழப்பு 30 ஆயிரத்து 800 ஆக உள்ளது என்று காசா சுகாதார அமைச்சகமும் தெரிவித்து இருந்தது.  உயிரிழந்தவர்களில் 3-ல் 2 பங்கு மக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

dead-body

காசா முனையில் நடைபெற்றுவரும் போரால் அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. காசாவில் உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஐநா மூலம் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வந்த நிலையிலும் தேவை அதிகரிப்பு காரணமாக காசாவில் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எகிப்து, இஸ்ரேல் எல்லைகள் வழியாக காசாவுக்கு லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வந்தன. ஆனால், பணய கைதிகளை விடுவிக்காதவரை நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள் காசாவுக்குள் நுழைய அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, காசாவுக்கு விமானம் மூலம் எகிப்து மற்றும் அமெரிக்கா நிவாரண பொருட்களை வழங்கின. எகிப்து விமானப்படை விமானங்கள் மற்றும் அமெரிக்க விமானப்படை விமானங்கள் காசா மீது உணவு, தண்ணீர், மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீசி வருகின்றன.

இந்நிலையில், காசா மீது அமெரிக்க விமானப்படை வீசிய நிவாரண பொருட்கள் அகதிகள் முகாம் மீது விழுந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். காசா சிட்டியின் ஷதி அகதிகள் முகாமில் பொதுமக்கள் உணவுக்காக வரிசையில் காத்திருந்தனர்.

அப்போது, அமெரிக்க விமானப்படை விமானங்கள் நிவாரண பொருட்களை வீசின. பாரசூட் மூலம் நிவாரண பொருட்கள் காசாவில் தரையிறங்கின. அப்போது, நிவாரண பொருட்களின் தொகுப்பு ஒன்று பாரசூட் திறக்காததால் அதிவேகமாக கீழே விழுந்தது. அது அகதிகள் முகாமில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். 

பாரசூட் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீசுவது பயனற்றது என்றும், நில எல்லை வழியாக நிவாரண பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென ஹமாஸ் ஆயுதக்குழுவால் நிர்வகிக்கப்பட்டுவரும் காசா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.    

From around the web