2023-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

 
Noble 2023

2023-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1901-ம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969-ம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பரிசு பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

Noble 2023

அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அறிவிக்கப்படும். அந்த வகையில், மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மருத்துவத்துக்கான நோபல் பரிசு கடாலின் கரிகோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன் இருவருக்கும் கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2023-ம் ஆண்டுக்கான இயற்பியல் துறையில் சாதித்த 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 விஞ்ஞானிகள் பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ், ஆனி ஹுலியர் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கூட்டாக அளிக்கப்படுகிறது. அணுக்கள், மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்களை ஆராய்வதற்கான சோதனைகளுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தாண்டுக்கான வேதியியலுக்கான விருது அக். 4-ம் தேதியும், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்துக்கான பரிசுகள் முறையே அக். 5, 6 மற்றும் 9-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

From around the web