கணவருக்கு கத்தி குத்து.. 3 குழந்தைகளுடன் காரை ஏரிக்குள் இறக்கிய மனைவி.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!
![Texas](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/97b6394a4175fc73acef912f42f7b02a.webp)
அமெரிக்காவில் பெண் ஒருவர், கணவனை கத்தியால் குத்தி விட்டு, 3 குழந்தைகளுடன் சென்று காரை ஏரிக்குள் விட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கர்ரோல்டன் பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த கார் ஏரி ஒன்றிற்குள் பாய்ந்தது. இதுகுறித்து காவல் துறைக்கு அவசரகால தகவல் சென்றது. அதில் பேசிய நபர், அவருடைய மனைவி கத்தியால் குத்தி விட்டார் என கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னரே, ஏரிக்குள் கார் பாய்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து லூயிஸ்வில்லே காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதன்படி, குடும்ப சண்டையால் பெண் ஒருவர் அவருடைய கணவரை கத்தியால் குத்தி விட்டு, 8, 9 மற்றும் 12 வயதுடைய 3 குழந்தைகளுடன் சென்று காரை ஏரிக்குள் விட்டுள்ளார் என கூறப்படுகிறது.
அதன்பின் மீட்பு குழுவினர் அவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதில் ஒரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 2 குழந்தைகளும் குணமடைந்து சீராக உள்ளனர் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
காயமடைந்த கணவருக்கும் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில், அந்த பெண்ணை கைது செய்த போலீசார், தாக்குதலுக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.