அணை உடைந்து வெள்ளத்தில் தத்தளிக்கும் கென்யா.. 120ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. 42 பேரின் உடல்கள் மீட்பு!
![Kenya](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/468895fbe6f0d36d11e47a0fb28f6c46.webp)
கென்யாவில் அணை உடைந்தது ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 120ஐ தாண்டியுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த மாதம் முதலாக கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த ஒருவாரமாக வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தலைநகர் நைரோபி வெள்ளத்தில் மிதக்கிறது. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால் இயல்புநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் குடியிருப்புகளை மூழ்கடித்துள்ளதால் கிட்டதட்ட ஒன்றரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர்.
இதனிடையே தெற்கு நகரமான மை மஹியுவில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அங்கு உள்ள உள்ள மிகப்பழமையான அணையான கிஜாப் அணை உடைந்ததில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் நீர் புகுந்தது. இதனால், வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, எதிர்பாராத மழையை எதிர்கொள்ள முடியாமல், கென்யா அரசு உலகநாடுகளிடம் உதவி கோரியுள்ளது.
மீட்புப்பணி குறித்து போலீசார் கூறுகையில், “கிஜாபே பகுதியில் அணை ஒன்று அதன் கரையில் உடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 17 சிறார் உள்ளடக்கிய 42 பேரின் உடல்களை நாங்கள் இதுவரை மீட்டுள்ளோம். மேலும், மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன” என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மழையினால் நீர்மின் அணைகள் கொள்ளளவிற்கு நிரம்பியுள்ளன. இது பாரிய கீழ்நிலை உபரிநீர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என அரசாங்க செய்தித் தொடர்பாளர் எச்சரித்தார்.