அமெரிக்காவில் இந்திய மாணவருக்கு கத்திக்குத்து.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
![Indiana](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/e4d772c131c4ce2adf88fb9c1cd950b3.jpg)
அமெரிக்க உடற்பயிற்சி நிலையத்தில் நடந்த கத்திக்குத்தில், படுகாயம் அடைந்த இந்திய மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் வருண் ராஜ் (24). இவர் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் வால்பரைசோ பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி வால்பரைசோ நகரில் உள்ள உடற்பயிற்சி மையத்துக்குச் சென்றிருக்கிறார்.
அப்போது அங்கு வந்த ஜோர்டான் ஆண்ட்ராட் என்கிற அமெரிக்க இளைஞர், வருணை சரமாரியாகக் கத்தியால் குத்தி இருக்கிறார். இதில் படுகாயமடைந்த வருண், ஃபோர்ட் வெயினில் உள்ள லுத்ரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். எனினும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வருண் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 5 சதவீதம் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதையடுத்து, கத்தியால் குத்திய ஜோர்டான் ஆண்ட்ராட் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது பயங்கர ஆயுதத்தை பயன்படுத்தியது மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஜோர்டான் ஆண்ட்ராட் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், “மசாஜ் செய்வதற்காக உடற்பயிற்சி மையத்துக்கு வந்தேன். அந்த அறையில் யாரும் இல்லாததால், மற்றொரு அறைக்குச் சென்றேன். அங்கிருந்த வருணை பார்த் போது, வித்தியாசமாகத் தெரிந்தார். அவரால் அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதி, அவரை கத்தியால் குத்தினேன்” என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், இந்திய மாணவர் வருண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வால்பரைசோ பல்கலைக்கழகம் அறிக்கை விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில், “வருண் ராஜின் மறைவை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் பல்கலைக்கழகம் அதன் சொந்தம் ஒன்றை இழந்துவிட்டது. வருணின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். வருணின் குடும்பத்தினருடன் பல்கலைக்கழகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது, இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவி மற்றும் ஆதரவை வழங்குவோம். நவம்பர் 16-ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் வருண்ராஜ் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.” என்று தெரிவித்துள்ளது.