அருவியில் குளிக்கச் சென்ற இந்திய மாணவர் நீரில் மூழ்கி பரிதாப பலி.. அமெரிக்காவில் தொடரும் சோகம்!
அமெரிக்காவில் அருவியில் குளிக்கச் சென்ற இந்திய மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் அல்பேனி பகுதியில் பார்பர்வில் அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி அருவியில் குளித்துக் கொண்டிருந்த 2 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில் ஒரு நபரை அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீட்டனர். அதே சமயம் மற்றொரு நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த நபர் இந்தியாவின் ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் மண்டலத்தைச் சேர்ந்த சிட்யாலாவைச் சேர்ந்த சாய் சூர்யா அவினாஷ் காடே என்பதும், அவர் அமெரிக்காவின் டிரினே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த தகவலை நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜூலை 7-ம் தேதி நியூயார்க்கில் உள்ள பார்பர்வில்லி நீர்வீழ்ச்சியில் மூழ்கி இறந்த ட்ரைன் பல்கலைக்கழக மாணவர் திரு. சாய் சூர்யா அவினாஷ் காடேவின் துயர இழப்பால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
We are deeply saddened by the tragic loss of Mr. Sai Surya Avinash Gadde, a student at Trine University, who drowned on 7th July at Barbervilley Falls, Albany, NY.
— India in New York (@IndiainNewYork) July 8, 2024
We extend our heartfelt condolences to his grieving family and friends. @IndiainNewYork is extending all…
இந்திய தூதரகம் காடேவின் உடலை இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்கு NOC வழங்குவது உட்பட தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குகிறது. இந்த கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன.” என்று பதிவிட்டுள்ளது.