பத்தாண்டுகளில் இறக்குமதி வரி முற்றிலும் ரத்து!! மீண்டும் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியமா?

அமெரிக்க அதிபர் அனைத்து உலகநாடுகள் மீதும் இறக்குமதி வரி விதித்து உலகப் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்துள்ள வேளையில், இந்தியாவின் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இங்கிலாந்து நாட்டுடன் புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த புதிய ஒப்பந்தத்தின் படி இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் விஸ்கி, கார் உள்ளிட்ட பொருட்களின் வரியை இந்தியா குறைத்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதான வரியும் நீக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இந்தியா - இங்கிலாந்து வர்த்தகத்தில் பெரும் மைல் கல் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் போது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 99.1 சதவீதப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை இங்கிலாந்து முற்றிலும் நீக்கிவிடும் என்று இந்தியத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ஏற்றுமதிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
மேலும் இங்கிலாந்தில் தற்காலிக விசாவில் பணிபுரியும் இந்தியர்கள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு தேசியக் காப்பீட்டுத் தொகை கட்டத் தேவையில்லை என்ற சலுகையையும் இங்கிலாந்து வழங்கியுள்ளது.
அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கும் வேளையில் இங்கிலாந்து இந்தியப் பொருட்கள் மீதான வரியை நீக்கியிருப்பது, மிகப்பெரிய பொருளாதார வாய்ப்பாகும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்,