அதிபராக என்னை தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும்.. அமெரிக்காவை அதிர வைத்த டொனால்ட் ட்ரம்ப்!

 
Trump

அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால் அமெரிக்காவில் ரத்தக் களறி ஏற்படும் என்று டிரம்ப் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக டொனால்டு டிரம்ப் அறிவித்தார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருக்கிறார்.

Biden

ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளராவதற்கு, 1,968 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், 2,099 பேரின் ஆதரவு ஜோ பைடனுக்கு கிடைத்துள்ளது. குடியரசு கட்சியில் 1,215 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், 1,228 பேரின் ஆதரவை டொனால்டு டிரம்ப் பெற்றுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அதிபர் பதவிக்கான போட்டி அதிகாரப்பூர்வமாகவே தொடங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டிரம்ப் தொடங்கியுள்ளார். அந்த வகையில், ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய டொனால்டு டிரம்ப், தன்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும் என்று எச்சரித்தார்.

டொனால்டு டிரம்ப் பேசுகையில், “அமெரிக்கா வரலாற்றில் அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமான நாளாகும்.  தன்னை மீண்டும் அதிபராக தேர்வு செய்யவில்லை என்றால் ரத்தக்களறி ஏற்படும்” என்றார். ஆனால் எதற்காக இப்படி டிரம்ப் பேசினார் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. அமெரிக்காவில்   ஆட்டோ இன்டஸ்ட்ரீஸ்க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பேசும்போது இவ்வாறு டிரம்ப் கூறியதால், தொழில் துறை தொடர்பாக எச்சரிக்கும் விதமாக பேசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

From around the web