ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட பணய கைதிகள்.. சுரங்கத்திற்குள் 6 பேரை பிணமாக மீட்ட இஸ்ரேல்!

 
Israel

ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட பணய கைதிகளில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. 

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 105 பேரை மீட்டது. மேலும், அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் பணய கைதிகள் சிலரை இஸ்ரேல் மீட்டுள்ளது. ஆனால், 108 பேர் இன்னும்  பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.  

Gaza

மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட பணய கைதிகளில் 6 பேர் இன்று பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். காசாவின் ரபா நகரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் அமைக்கப்பட்ட சுரங்கத்திற்குள் இஸ்ரேல் படையினர் இன்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் அக்டோபர் 7-ம் தேதி பணய கைதிகளில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 


பாதுகாப்புப்படையினர் சுரங்கப்பகுதியில் சோதனை நடத்துவதற்கு ஓரிரு நாட்களுக்குமுன்பே பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கொன்றுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர்களில் 2 பெண்கள் உள்பட 6 பேர் அடக்கம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.  

From around the web