மசூதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து.. போலீஸ்காரர் ஒருவர் பலி.. தொழுகையின் போது விபரீதம்!

 
Pakistan

பாகிஸ்தானில் மசூதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் உள்ள மசூதியில் கடந்த 8-ம் தேதி இரவு ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இது குறித்து போலீசார் மற்றும் மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Blast

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். 5 போலீஸ்காரர்கள் உள்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

dead-body

விசாரணையில், மசூதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள், தொழுகை நடைபெற்றபோது தங்களுக்கு தேநீர் தயாரித்தபோது சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். மசூதியில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

From around the web