ஓட்டுநர் இல்லாத பேருந்து... உலகில் முதல் முறையாக ஸ்காட்லாந்தில் தொடக்கம்!!

 
scotland

உலகின் முதல் தானியங்கி பேருந்து சேவை ஸ்காட்லாந்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த நிலையில், தற்போது போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது தானியங்கி பேருந்துகள். இந்த பேருந்துகள் ஓட்டுநர் இல்லாமல் தானே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வகை பேருந்து சேவை ஸ்காட்லாந்தில் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இந்த பேருந்து ஸ்காட்லாந்தின் ஃபோர்த் ரோடு பாலத்தின் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு தனது முதல் பயணத்தை மேற்கொண்டது. இத்திட்டத்தின் சோதனை முயற்சியாக இன்வெர்கீதிங், ஃபைஃப் மற்றும் எடின்பர்க் பூங்காவிற்கு அருகிலுள்ள பெர்ரி டால் வரை பேருந்து சேவை இயக்கப்படுகிறது. 

scotland

ஸ்காட்லாந்தின் போக்குவரத்து அமைச்சர் கெவின் ஸ்டீவர்ட் இந்த பேருந்தில் முதல் பயணியாக பயணம் செய்தார். மேலும், 2025ம் ஆண்டு வரை சோதனை அடிப்படையில் ஓட்டுநர் இல்லாத ஐந்து தானியங்கி பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பேருந்திலும் வாகனத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பாதுகாப்பு ஓட்டுநர் மற்றும் டிக்கெட் விற்பனையாளர் என இரண்டு பணியாளர்கள் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ஸ்டேஜ்கோச் தானியங்கி பேருந்துகள் எதிர்வினை நேரத்தைக் குறைப்பதன் மூலம் பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் வாரத்திற்கு சுமார் 10,000 பயணிகள் பயணம் செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பேருந்து சேவை நிறுவனத்தின் அதிகாரி பீட்டர் ஸ்டீவன் ஸ்டேஜ் கோச் கூறுகையில், ”தானியங்கி பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் முழுமையான தானியங்கி பேருந்து சேவையை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

From around the web