தினமலர் நாளிதழுக்கு அமெரிக்காவிலிருந்து கண்டனம்! வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை பொளேர்!

 
Dinamalar - MKS

காலை உணவு திட்டம் குறித்து தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்திக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் பேரவை கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 25-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

இந்த நிலையில் இத்திட்டம் குறித்து தினமலர் நாளிதழ் சேலம் பதிப்பகம் முதல் பக்கத்தில் “காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு…ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த செய்தியில், “மாணவர்கள் காலையில் வீட்டில் சாப்பிடுகின்றனர். பள்ளிக்கு வந்ததும் அங்கும் சாப்பிடுகின்றனர். இதனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் இயற்கை உபாதைக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலரின் இந்த செய்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனச் சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.

Breakfast Scheme

‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.

நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! #தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தினமலர் நாளிதழுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் பேரவை கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் நடக்கும் சமுதாய நிகழ்வுகளை இணையம் மூலம் தொடர்ந்து நோக்குதல் தமிழர்களுக்கு அன்றாட நடவடிக்கை என்றால் அது மிகை அல்ல. அவ்வாறு ஆகஸ்ட் 31 தமிழ்நாட்டில் ஒருதலைப் பட்டச்சமாக செயல்படும் ஒரு நாளிதழ் செய்த செயல் மிகவும் அருவருக்க மற்றும் கண்டிக்கத் தக்க செயலாயிற்று.

சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பாராட்டுத்தக்கத் திட்டமான காலை உணவு திட்டத்தால், மாணவர்கள் பசி இன்றி ஊட்டச்சத்துள்ள உணவை கிடைக்க செய்து, குறிப்பாக மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து உணவு உண்டுவிட்டு, கல்வி கற்பது என்பது தமிழ் சமுதாயத்திற்கே பெருமை சேர்க்கும் விதமான இந்த திட்டத்தை உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் கட்சிக்கு அப்பாற்ப்பட்டு மனதார பாராட்டி வருகிறார்கள்.

அப்படிப்பட்ட திட்டத்தை தமிழ்நாட்டிற்கு அருகே உள்ள மாநிலம் தெலுங்கானா அரசு அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வந்து அந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களை கேட்டு அறிந்து, அதனை தங்கள் மாநிலத்தில் எப்படி செயல் படுத்துவது என்பதை கேட்டு அறிந்து சென்று இருப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை.

இப்படி உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் மனதார பாராட்டிக் கொண்டு இருக்கும் வேலையில், தமிழ்நாட்டில் உள்ள தினமலர் பத்திரிக்கை, ஊடக தர்மத்தை மறந்து, “காலை உணவு திட்டத்தை” கொச்சைப் படுத்தும் விதமாக தலைப்பு செய்தி இட்டு இருப்பது மிக மிக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக ஏழை எளிய மற்றும் கிராமப்புற மாணவர்கள், அவர்களின் குடும்பங்களை இழிவு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு இருப்பது மிக தவறான செயல்.

இதற்கு ‘தினமலர் - சேலம்’ பதிப்பு ஆசிரியர் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பாக கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாடு அரசிடம் மன்னிப்பு என்பதை விட, தமிழ்நாட்டு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் தார்மீக அடிப்படையில் மன்னிப்பு கேட்க வேண்டும் அதுவே அறம்!

தினமலரின் இந்த தரம் கெட்ட செயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு அமைச்சர்களும், உலகெங்கும் இருக்கும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் என்ற முறையில் ‘தினமலர்’ நாளிதழுக்கு என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளது.

From around the web