மூன்றாண்டுகள் நீடித்த தேர்வு!! அடுத்த போப் யார்? எப்போது தெரியும்?

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி அடுத்த போப் ஐ தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி விட்டன. வாடிகன் நகரில் இந்த தேர்வு நடைபெறுகிறது. உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க சமயத்தவர்களுக்கு தலைமைப் பொறுப்பு கொண்டவர் தான் போப். கத்தோலிக்க தேவாலயங்களில் பிஷப், ஆர்ச்பிஷப் என்ற நிலையிலிருப்பவர்களுக்கு கார்டினல் என்ற பொறுப்பை போப் வழங்குவது வழக்கம்.
அப்படி கார்டினல்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களில் ஒருவரை போப் ஆக தேர்ந்தெடுப்பார்கள். போப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கத்தோலிக்க சமயத் தலைவராக வழிகாட்டுவார்.
போப் பிரான்சிஸ் மறைந்து விட்டதால் அவருக்குப் பதிலாக புதிய போப் தற்போது தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். உலகம் முழுவதிலிருந்தும் கார்டினல்கள் வாடிகன் நகருக்கு வந்து விட்டனர். இவர்கள் தாங்கள் விரும்பும் கார்டினல்களை தேரு செய்து சிஸ்டைன் வழிபாட்டுத் தளத்தில் தங்கள் வாக்குகளை செலுத்துவார்கள்.
வாக்கு எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு வாக்குகள் பெற்றவர் போப் ஆக அறிவிக்கப்படுவார். முதல் சுற்றில் யாரும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெறாவிட்டால் அங்குள்ள புகைக்கூண்டில் கருப்புப் புகை வெளியாகும். மீண்டும் அடுத்த சுற்று வாக்குப் பதிவு தொடங்கும். இப்படியே மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற்று புதிய போப் தேர்வாகும் வரையிலும் வாக்குப்பதிவுகள் நடந்து கொண்டே இருக்கும். புதிய போப் தேர்வானதும் புகைக் கூண்டில் வெள்ளைப் புகை வெளியாகும். அதன் மூலம் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்ட்டார் என்று வெளி உலகத்திற்கு முதன் முதலாகத் தெரியவரும்.
இந்த நடைமுறை முடியும் வரையிலும் கார்டினல்கள் வாடிகன் நகரில் உள்ள போப் விருந்தினர் மாளிகையில் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு செல்போன், இண்டெர்நெட் உள்ளிட்ட எந்த வெளியுலகத் தொடர்புகள் இருக்காது.
13ம் நூற்றாண்டில் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட 3 ஆண்டுகள் வரை ஆனதாக தகவல் உண்டு. புதிதாக தேர்ந்தெடுக்கப்படுபவர் போப் பிரான்சிஸ் போல் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் முற்போக்குவாதியாக இருப்பாரா? அல்லது வலது சாரி சிந்தனை கொண்டவராக இருப்பாரா என்பது உலக மக்கள் முன்னால் உள்ள பெரிய கேள்வியாகும்.