அமெரிக்காவில் 36 ஆண்டுகளாக இயங்கி வரும் தமிழ்ப் பள்ளி!  இணையத்தால் உலகம் முழுவதும் விரிவாக்கம்!! 

 
ளக்ஷ்மி பள்ளி

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் அட்லாண்டாவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் லட்சுமி தமிழ் பயிலும் மையத்தின் 36 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

லஷ்மி ஷங்கர் அவர்களின் முன்னெடுப்பில் 1987இல் தொடங்கப்பட்ட இப்பள்ளியானது தொடர்ந்து 36 ஆண்டுகளாக இடையறாது செயல்பட்டு வருகிறது. அவரே முதல்வராக முன்னின்று நடத்தும் இப்பள்ளி தற்போது 19 தன்னார்வல ஆசிரியர்களோடும், 250க்கும் மேற்பட்ட மாணவர்களுடனும் இயங்கி வருகிறது. 

இந்த ஆண்டு முதல் அமெரிக்காவின் பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளான கனடா, இங்கிலாந்து, டென்மார்க், லக்சம்பர்க், ஜப்பான், ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு பகுதிகளில் லஷ்மி தமிழ் பயிலும் மையம் தனது தமிழ்ப் பணிகளை விரிவுபடுத்தியுள்ளது. பொதுமுடக்கக் காலத்தில் இணையதள வகுப்பு முறைக்கு இனிதே பழக்கப்பட்ட பள்ளியின் ஆசிரியர்களள், இடம் பெயர்ந்தாலும் தொடர்ந்து இப்பள்ளியிலேயே தொடர விருப்பம் தெரிவித்த மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பெறப்பெற்ற சேர்க்கைக் கோரிக்கைகளால் இந்த உலகளாவிய விரிவுபடுத்தல் சாத்தியமாகியுள்ளது.

லஷ்மி பள்ளி

பள்ளியின் 36ஆம் ஆண்டு விழாவானது திட்டமிடப்பட்டிருந்த நாளில் அமெரிக்கக் கிழக்கு நேரம் மதியம் 1 மணிக்கு பள்ளிக் குழந்தைகளின் இறைவணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா தொடங்கியது.. நிகழ்ச்சிகளைப் பள்ளி ஆசிரியர்கள் லட்சுமி நிஜவீரப்பா மற்றும்  சித்ரா சந்திரசேகர் தொகுத்து வழங்கினார்கள், ஆசிரியர்  கிருத்திகா நடராஜன் வரவேற்புரை வழங்க, லஷ்மி ஷங்கர் தமது முதல்வர் உரை மூலம் பள்ளியைப் பற்றியும், அதன் வளர்ச்சி மற்றும் திட்டங்கள் பற்றியும் பெற்றோர்களுக்கு எடுத்துரைத்தார். 

சிறப்பு விருந்தினராக அமெரிக்கத் தமிழ்க்கவிஞர் மற்றும் பன்முகத் திறமையாளர் நெல்லை அன்புடன் ஆனந்தி பங்கேற்று சிறப்பு செய்தார். 'வாசிப்பின் அவசியம்' என்ற தலைப்பில் அருமையானதொரு உரையையும் நிகழ்த்தித் தந்தார். நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிள்ளைகளை இன்முகத்தோடு குறிப்பிட்டுப் பாராட்டியதோடு நில்லாது, பங்களித்த குழந்தைகள் அனைவருக்கும் ஆத்திசூடிப் புத்தகத்தைப் பரிசளிப்பதாகக் கூறி வியப்பூட்டினார்.

வண்ணமயமாகத் தொடங்கிய கலைநிகழ்ச்சிகள் விதவிதமாக, வியத்தகு முறையில் அமைந்திருந்தது. ஆடல், பாடல், நாடகம், இலக்கிய உரையாடல், கருத்தாழமிக்க கதையாடல், விடுகதை, விநாடிவினா, இசைக்கருவி இசைத்தல் எனப் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் தம் திறமைகளைப் பன்னாட்டு மாணவமணிகள் மேடையேற்றினர். திருக்குறள், ஆத்திசூடி, பாரதியார் பாடல் என ஒப்புவித்த மழலையர்கள், தாங்கள் அவர்களாகவே வேடம் அணிந்து வந்து பங்களித்ததனர்.

லஷ்மி பள்ளி 2

மேல்வகுப்புப் பிள்ளைகள் தாங்களே ஒருங்கிணைத்த நாடகங்கள், தலைவர்கள் பற்றிய உரைகள் போன்றவற்றின் மூலம் தங்களின் முதிர்ச்சியையும், அறிவையும் வெளிப்படுத்தும் தளமாக நிகழ்ச்சியைக் கொண்டுசென்றது சிறப்பு. உலகின் வெல்வேறு மூலையில் இருந்து பங்களித்த மாணவர்கள் தங்களின் நிலப்பரப்பு பற்றிய தகவல்களையும் சேர்த்து அளித்தது மகுடமாக அமைந்தது.

பார்வையாளர்கள் கண்டு களித்த கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுற, ஆசிரியர்கள் தத்தம் வகுப்பில் தேர்ச்சியுறும் மாணவர்களுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து, சான்றிதழ்களை வழங்கினர். ஆசிரியர்  மீனா சுந்தர் நன்றியுரையாற்றினார். பிள்ளைகளின் பங்களிப்பில், மொழி வாழ்த்து, இந்திய, அமெரிக்க தேசியகீதம் முதலியவை முழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது!

லஷ்மி பள்ளி 4

ஆறு மணிநேரம் கடந்தும் தொடர்ந்து நடந்த இந்த நிகழ்வு, சற்றும் தொய்வுறாது, ஆரவாரங்களோடு நிகழ்ந்து முடிந்தது.  பின்னின்று ஒருங்கிணைத்து வழிநடத்திச் சென்ற ஆசிரியர் அகிலா சுரேஷ்,  தொழில்நுட்ப உதவி புரிந்த சுரேஷ் கணேசபாண்டியன் மற்றும் இரகுபதி ராகவன் ஆகியோரின் உழைப்பு அலாதியானது.. உலகப்பந்தின் வெல்வேறு மூலையிலிருந்து பல கண்டங்களில் வசிக்கும் மாணவர்களும், அவர்களது பெற்றோர், உறவினர்கள் பலரும் நேரம் கருதாது இறுதிவரை இருந்து நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.. நிகழ்ச்சி நிறைவுற்ற அமெரிக்கப் பின் மாலைப் பொழுதென்பது, இந்தியாவில் விடியற்காலை, ஜப்பானில் முற்பகல், ஐரோப்பாவில் நள்ளிரவு என்பது குறிப்பிடத்தக்கது. .

நிகழ்ச்சியில் இடையிடையே பெற்றோர்கள் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்திய உற்சாகத்தில் இறுதிவரை நிலைத்திருந்தது, இந்த நிகழ்ச்சிக்கான வெற்றியும், அடுத்தத் தலைமுறை தமிழ் தாங்கிச் செல்லும் பெருமிதமும் எனலாம்.  நிகழ்ச்சியை https://tinyurl.com/YouTubeAnnualDay2023 என்ற வலையொளியில் காணலாம்.

- சக்திவேல் கொளஞ்சிநாதன், அட்லாண்டா

From around the web