ஈரானில் இளம்பெண்ணை அடித்து கொன்ற போலீஸ்!! ஹிஜாப்பை எரித்து, தலைமுடியை வெட்டி பெண்கள் நூதன போராட்டம்!

 
Iran

இஸ்லாம் மதத்தை பின்பற்றும் நாடுகளில் ஒன்றான ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது 1979ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், அந்நாட்டின் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த மஹ்சா அமினி (22) என்ற இளம்பெண் தனது குடும்பத்துடன் கடந்த 13-ம் தேதி தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அதேவேளை, ஈரானில் உடை தொடர்பான நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் நெறிமுறை போலீஸ் பிரிவு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

தெஹ்ரான் செல்லும் வழியில் மஹ்சா அமினி மற்றும் அவர்களது குடும்பத்தினரை நெறிமுறை போலீசார் இடைமறித்துள்ளனர். அப்போது, மஹ்சா அமினி, தனது தலைப்பகுதியை ஹிஜாப்பால் முழுமையாக மறைக்கவில்லை என கூறி அவரை கைது செய்து கடுமையாக தாக்கியுள்ளனர். போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த மஹ்சா காவல் நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Iran

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஹ்சா அமினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்தனர். கோமா நிலைக்கு சென்ற மஹ்சா அமினிக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து உயிரிழந்த மஹ்சா அமினிக்கு ஆதரவாக போலீசாரை கண்டித்து அந்நாட்டு பெண்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் இறங்கினர். ஹிஜாப்பால் ஒருபெண் உயிரிழந்ததை அடுத்து, தங்களது ஹிஜாப்பை கழற்றி தீயிட்டு கொளுத்தினர். மேலும், தங்களது கூந்தலையும் வெட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் பெருமளவு ஹிஜாப்பை எறித்து போராட்டத்தில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஈரானிய பத்திரிகையாளரும் ஆர்வலருமான மசிஹ் அலினெஜாட் டுட்விட்டரில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஹிஜாப் போலீசாரால் மஹ்சா அமினி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஈரானிய பெண்கள் தலைமுடியை வெட்டியும், ஹிஜாபை எரித்தும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். 7 வயதில் இருந்து பெண்கள் நாங்கள் எங்கள் முடியை மறைக்கவில்லை என்றால் பள்ளிக்கு செல்ல முடியாது, வேலையும் கிடைக்காது. இந்த பாலின வெறி ஆட்சியால் நாங்கள் சோர்வடைகிறோம்.

அமைதியான போராட்டக்காரர்கள் மீது ஈரானின் சக்சேஸ் பகுதியில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பல போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளனர். முதலில் போலீசார் 22 வயது பெண்ணை கொன்றனர், இப்போது போராட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிகள் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளைப் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

From around the web