கடலில் குளிக்க சென்ற சிறுவன்... மூளை உண்ணும் கிருமியால் நேர்ந்த கொடூரம்!
அமெரிக்காவில் சிறுவன் ஒருவன் கடலில் நீந்தச் சென்றபோது பயங்கர கிருமி ஒன்றினால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக அவனது பெற்றோர் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் சார்லோட் கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்றிருந்தபோது, சிறுவன் காலேப் ஜீகல்பாயர் (13) தண்ணீரில் நீந்தச் சென்றுள்ளான். அதைத் தொடர்ந்து 5வது நாள் தலைவலியால் பாதிக்கப்பட்டதுடன், இல்லாதவற்றை இருப்பதுபோல் தோன்றச் செய்யும் பிரமையால் பாதிக்கப்பட்டுள்ளான்.
முதலில் காலேப்க்கு மூளைக்காய்ச்சல் என்று மருத்துவர்கள் நினைத்து இருக்கிறார்கள். பின்னர்தான், அவன் நெக்லேரியா ஃபோலேரி என்னும் மூளையைத் தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த பயங்கர நோய்க்கிருமி மூக்கின் வழியாக சென்று மூளைக்குள் நுழைந்து விடக்கூடியதாகும்.
இந்த கிருமித் தொற்றுக்கு ஆளாகுவோர் உயிர் பிழைக்க 25 சதவிகித வாய்ப்புதான் உண்டு. மூளையில் வீக்கம் ஏற்பட்டு உயிருக்குப் போராடி வரும் காலேப்க்கு உதவுவதற்காக கோபண்டுமீ அமைப்பின் மூலம் பணம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
1962 முதல் 2021 வரை அமெரிக்காவில் இந்த கிருமித்தொற்றுக்கு ஆளான 164 பேரில் 4 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.