புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பெருவிழா! அமெரிக்காவில்  ஒன்பது நாள் தொடர்விழா!!

 
Bharathidasan

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாளை,  ஒன்பது நாள் விழாவாக அமெரிக்கத் தமிழர்கள் கொண்டாடுகின்றனர்.  பாரதிதாசனின் நினைவு நாளான ஏப்ரல்  21-ஆம் தேதி  முதல், பிறந்தநாளான ஏப்ரல் 29-ஆம் தேதி வரை தொடர் நிகழ்ச்சிகளாக, ஒன்பது நாட்களுக்கு புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் கவியரங்கம், கருத்தருங்கம், தமிழிசையரங்கம், இலக்கிய அரங்கம், பட்டிமன்றம், போட்டிகள் என பல்வேறு நிகழ்சிகளை நடத்திக் கொண்டாட உள்ளனர். அமெரிக்காவில் செயல்பட்டு வரும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
 
முதல்நாள் அன்று நடைபெறும் புரட்சிக்கவிஞர் நினைவு நாள் நிகழ்ச்சியில்  'பாரதிதாசன் நினைவலைகள்' எனும் தலைப்பில், பாவேந்தரின் பேரப்பிள்ளைகள் பாவலர் மணிமேகலை குப்புசாமி, கவிஞர்.புதுவை கோ. செல்வம், மற்றும் முனைவர்.கோ. பாரதி ஆகியோர் அவருடனான நினைவலைகளை  பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றத்தின் பிரசாத் பாண்டியன் நெறியாள்கை செய்ய, துரைக்கண்ணன் வரவேற்புரை வழங்க உள்ளார்.  வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர்  முனைவர்.பாலா சுவாமிநாதன் வாழ்த்துரை வழங்குகிறார்.

இரண்டாம் நாள் 'பரம்பரை கண்ட பாரதிதாசன்’ என்ற தலைப்பில்  கருத்தரங்கம் நடைபெற உள்ளது. பாரதிதாசனை  தன் பரம்பரையாக கொண்டவர்களை பற்றிய நிகழ்ச்சி இது.  கருத்தரங்கத்தை மதுரை யாதவர் கல்லூரியின் மேனாள் தமிழ் உயராய்வு மையத் தலைவர் பேராசிரியர்.முனைவர் இ.கி.இராமசாமி. தலைமை தாங்குகிறார்.  பாரதிதாசன் பரம்பரையில் கவிஞர்.சுரதா பற்றி தமிழியக்கம் அமைப்பின் வட தமிழக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் கு.வணங்காமுடியும், கவிஞர்.குலோத்துங்கன் பற்றி அமெரிக்காவின் தாம்பா நகரைச் சேர்ந்த பேராசிரியர்  மேகலா ராமமூர்த்தியும், கவிஞர்.வாணிதாசன் குறித்து மிச்சிகனிலிருந்து ராம்குமாரும்  மற்றும் கவிஞர்.முடியரசன் குறித்து மத்திய இலனாய் தமிழ்சங்கத்தைச் சேர்ந்த செங்குட்டுவனும் உரையாற்றவுள்ளனர்.

மூன்றாம் நாள் பேச்சுப்போட்டி  நடைபெற  உள்ளது, குழந்தைகள் பற்றி பாரதிதாசன் என்ன கூறியுள்ளார் என்று குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையில் ’பாரதிதாசன் பாடல்களில் குழந்தைகள்’ என்ற தலைப்பில் இந்த போட்டி நடைபெறுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து பல சிறுவர் சிறுமியர் இந்நிகழ்ச்சிக்கு மிகுந்த ஆர்வத்துடன் பதிவு செய்துள்ளனர்.  இந்நிகழ்வில் உலகெங்குமிருந்து போட்டியாளர்கள் பங்கு பெறுவதால் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசாக 100, 75, 50 அமெரிக்க வெள்ளிக்கு இணையான மதிப்பிற்கு வெற்றி பெருவோர் வசிக்கும் நாட்டின் பணம் வழங்கப்படும். 

நான்காம் நாள் 'பாரதிதாசனின் சமூக சிந்தனையும், அரசியல் சிந்தனையும்’ என்ற தலைப்பில் கவியரங்கம்  நடைபெற உள்ளது. கவியரங்கத்திற்கு குளித்தலை தமிழ்ப்பேரவையின் தலைவர் முனைவர் கடவூர் மணிமாறன் தலைமை தாங்குகிறார்.   தமிழியக்கம் குறித்து கலிஃபோர்னியாவிலிருந்து கவிஞர் டெய்சி ஜெயப்ரகாஷ், கல்வி குறித்து டெக்சாசிலிருந்து கவிஞர் ப்ரீத்தி வசந்த், பெண்ணியம் குறித்து கோவையிலிருந்து கவிஞர்.தேஜஸ் சுப்பு, உழைப்பாளர்  குறித்து சென்னையிலிருந்து கவிஞர் செ.புனிதஜோதி, பகுத்தறிவு குறித்து லண்டனிலிருந்து கவிஞர்.வளர்மதி பாரத், பண்பாடு குறித்து மலேசியாவிலிருந்து தோழர்.இளமாறன் நாகலிங்கம் ஆகியோர் பங்கேற்கிறார்கள். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மேனாள் தலைவர் முனைவர் இரா. பிரபாகரன்,வாழ்த்துரை வழங்குகிறார். கவிஞர்.இப்ராகிம் பாருக் நெறியாள்கை செய்கிறார்.

 ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக ’பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா? சமூக சீர்திருத்தமா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது. திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அ. அருள்மொழி  நடுவராக சிறப்பிக்க உள்ளார்,  திருவாரூர் திரு வி க அரசு கலைக்கல்லூரியின் கௌரவ விரிவுரையாளர் முனைவர் அகிலா, அரிசோனாவில் வசிக்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகள் சித்திரச்செந்தாழை மொழி உணர்வு என்ற தலைப்பில் வாதாடுகின்றனர், தமிழ் நாட்டிலிருந்து  சமூகச் செயற்பாட்டாளர் மணிமேகலை, டெக்சாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் செயலர் சுமிதா கேசவன் சமூக சீர்திருத்தம் என்ற தலைப்பில் எதிர் தரப்பில் பங்கேற்கிறார்கள்.   இந் நிகழ்ச்சியை பிரசாத் பாண்டியன் நெறியாள்கை செய்ய, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முதல் பெண் தலைவராக  திறம்பட பணியாற்றிய  செந்தாமரை பிரபாகர் வாழ்த்துரை வழங்கவுள்ளார்கள்.

ஆறாம் நாள் நிகழ்ச்சியாக நடைபெறும் இலக்கியரங்கத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்  அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறைத் தலைவர் முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் ’தமிழச்சியின் கத்தி’ என்ற பாவேந்தரின் படைப்பு குறித்து இலக்கியவிருந்து வழங்கவுள்ளார்.  இந்நிகழ்ச்சியில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மேனாள் தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா அவர்கள் வாழ்த்துரை வழங்க, டெக்சாசிலிருந்து ப்ரீத்தி வசந்த் நெறியாள்கை செய்ய உள்ளார்.  

ஏழாம் நாள் நிகழ்ச்சியாக தமிழிசையரங்கம் நடைபெற உள்ளது. “வட மொழிக்கிங்கே என்ன ஆக்கம்? இலங்கும் இசைப் பாட்டுக்கள் பிறமொழியில் ஏற்படுத்த இசைய லாமோ? நலங்கண்டீர் தமிழ்மொழியால், நற்றமிழை ஈடழித்தல் நன்றோ?” என்று முழங்கிய பாரதிதாசனின் பாடல்கள் மெட்டிசைக்கப்பட்டு பல்வேறு அரங்குகளில் தமிழிசையில் ஒலிக்கப்பட  வேண்டும் என்பதின் முயற்சியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதில்  கலைமாமணி தமிழிசை வேந்தர் முனைவர் புஷ்பவனம் குப்புசாமி தலைமையேற்கிறார்.  தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் மாணவர்க்களம் இதழாசிரியர் மா.பிறைநுதல், அமெரிக்காவிலிருந்து இயங்கும் உலகத் தமிழிசை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் பாபு விநாயகம், அமெரிக்காவின் மேரிலாந்து நகரிலிருந்து இயங்கும் சங்கீத சாரதா இசைப்பள்ளியின் முதல்வர் லாவண்யா சுப்ரமணியன், மேரிலாந்தைச் சேர்ந்த மெல்லிசைப் பாடகி இராஜாம்பாள் ஜோதிமணி, மலேசியாவிலிருந்து பாடகர் விண்ணரசு அறிவழகன் மற்றும் வயலின் கலைஞர் அங்கயற்கனி அறிவழகன் என ஆறு பாடகர்கள் புரட்சிக்கவிஞரின் பாடல்களை தமிழிசையில் பாடவுள்ளனர்.இந்நிகழ்ச்சியை பாடகர் மற்றும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இரா. குமணன் நெறியாள்கை செய்ய, அமெரிக்காவில் தமிழிசைக்காக பல அரிய முயற்சிகளை முன்னெடுக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மேனாள் தலைவர் நாஞ்சில் பீற்றர் வாழ்த்துரை வழங்கவுள்ளார்.

எட்டாம் நாள் நிகழ்ச்சியாக ’பாரதிதாசன் நாடகத்தின் கூறுகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. பாரதிதாசன் நாடகத்தின் பல கூறுகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது. கருத்தரங்கத்தினை மும்பையிலிருந்து இயங்கும் தமிழ் இலெமுரியா இதழின் முதன்மை ஆசிரியருமான் சு.குமணராசன்  தலைமை தாங்க, நாடகத்தில் மொழிப் பயன்பாடு  குறித்து ஈழத்திலிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை இறுதியாண்டு மாணவர் சாரங்கன் விக்கினேசுவரநாதனும், ஆளுமைத் திறன் குறித்து தமிழ்நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர்.வா. நேருவும், கதையாக்கம் குறித்து அமெரிக்காவிலிருந்து இயங்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தினைச் சேர்ந்த  வழக்கறிஞர் கனிமொழியும், பண்பாடு குறித்து புதுச்சேரியிலிருந்து இயங்கும் தேசிய மரபு அறக்கட்டளையின் தலைவர் அறிவன் அருளியாரும் ஆய்வுரை வழங்கவுள்ளனர்.  பெங்களூருவைச் சேர்ந்த கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்துமணி நன்னன் நெறியாள்கை செய்ய, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை அமைக்க அரும் பாடுபட்ட தமிழ் இருக்கை குழுமத்தின் தலைவர் மருத்துவர் விஜய் ஜானகிராமன் வாழ்த்துரை வழங்கவுள்ளார்.

ஏப்ரல் 29 புரட்சிக்கவிஞரின் பிறந்தநாள் அன்று நடைபெறும் நிறைவு நாள் நிகழ்ச்சியில் ’நெருப்பில் பூத்த மலர்’ என்ற தலைப்பில் பத்மஶ்ரீ மற்றும் இருமுறை சாகித்ய அகாதமி விருதுபெற்ற பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் சிறப்புரை வழங்குகிறார். அந்நிகழ்வை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான டெய்சி ஜெயப்ரகாஷ் நெறியாள்கை செய்திட வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி வாழ்த்துரை வழங்கவுள்ளார்.

 

Bharathidasan

உலகத் தமிழர்கள் அனைவரும், ஒன்றிணைந்த  தமிழ் உணர்வுடன், அனைத்து நிகழ்வுகளையும் பார்த்தும் கேட்டும் மகிழ  இணையவழி சூம்(Zoom)  வழியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூம் எண் (Zoom Meeting ID) மற்றும் கடவுச் சொல் (Passcode) விவரங்களை மேலே உள்ள நிகழ்ச்சி நிரலில் காணலாம்

-டெய்சி ஜெயப்ரகாஷ், கலிஃபோர்னியா

From around the web