அமெரிக்காவில் வள்ளுவம்! சாதித்துக் காட்டிய 10 அமெரிக்கத் தமிழர்கள்!!

 
USA Thirukural Winners USA Thirukural Winners

யாவரும் கேளிர் அமைப்பின் சார்பில் 'அமெரிக்காவில் வள்ளுவம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.  அமெரிக்காவில் 1330 திருக்குறள்களையும் பொருளுணர்ந்து சொல்லி இருக்கின்ற, ‘குறள் அரசி’-களும், ‘குறள் அரசர்’களும் பங்கேற்று தங்கள் ஆளுமையை உலகம் முழுவதும் பறை சாற்றுகின்ற வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. 

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு விஜிபி குழுமத்தின் தலைவர் விஜிபி சந்தோஷம் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். அட்லாண்டா ராஜ்குமார் பாண்டுரங்கன் வரவேற்புரை ஆற்றினார்.

குறள் முழக்கம் முனைவர்  இரா.பிரபாகரன், சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நிறுவனர்கள் வேலு ராமன், விசாலாட்சி வேலு மற்றும் விரிகுடா குறள் கூடம் திருமுடி துளசிராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் கார்டுவெல் வேள்நம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

Atlanta Thirukural

இது வரையிலும்  அமெரிக்காவில் 1330 திருக்குறள்களையும் சொல்லிய குறள் அரசிகள் மற்றும் குறள் அரசர்கள் பங்கேற்று தங்களுடைய அனுபவங்களை மெய்சிலிர்க்கப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுடைய பெயரும் 1330 திருக்குறள்களை ஒப்புவித்த ஆண்டும் வருமாறு,

குழந்தைகள் :
1. ராஷிகா சுதாகர்-2022
2. தனிஷ் சட்டநாதன்-2022
3. அத்விகா சச்சிதானந்தன்-2015
4. சீதா ராமசாமி-2017

பெரியவர்கள் :
5.  கீதா அருணாச்சலம்-2014
6.  முனைவர்.சித்ரா மகேஷ்-2016
7.  செந்தில்செல்வன் துரைசாமி-2018
8.  பிரசன்னா சச்சிதானந்தன்-2016
9.  சுகன்யா கல்யாணிசுந்தரம்-2018
10. ஈஸ்வரி பாண்டியன்-2016

அமெரிக்காவில் வாழ்கின்ற  சுமார் 2 லட்சத்து 93 ஆயிரம் பேரில் இந்த 10 பேர் தனித்துவமாக, அமெரிக்காவிலும் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களுக்கும் முன்மாதிரியாகவும் அடுத்த தலைமுறைக்கு உதாரணமாகவும் திகழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் பிரசாத் நன்றி உரையாற்றினார். யாவரும் கேளிர்’ நிறுவனர் மகேந்திரன் மாணிக்கம், அட்லாண்டா மாநகர தமிழ்ச்சங்க மேனாள் தலைவர் முனுசாமி  ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

- ஜெயசாரதி

From around the web