பப்புவா நியூ கினியாவில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! 5 பேர் பலி

பப்புவா நியூ கினியா நாட்டில் 7.6 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
பசுபிக் பெருங்கடல் தென்மேற்குப் பகுதியில் பப்புவா நியூ கினியா அமைந்துள்ளது. பப்புவா நியூ கினியாவின் மொரோப் மாகாணத்திற்கு உட்பட்ட மிக பெரிய துறைமுக நகராக அறியப்படும் லே நகரில் இருந்து 65 கி.மீ. தொலைவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நடுக்கம் 61.4 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. இன்று காலை உள்ளூர் நேரப்படி 9.46 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை நகரின் முக்கியப் பகுதிகளில் இருக்கும் பல்வேறு தரப்பினரும் உணர்ந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், கட்டடங்கள் மற்றும் சாலைகளில் சேதம் ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கடுமையான நிலநடுக்கத்தால் முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பின்னர் சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதேபோல் பப்புவா நியூ கினியாவின் பல்வேறு பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. இதனால் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்டுள்ள சேத விவரம் குறித்தும் அறியப்படாமல் உள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கெஸ்ஸி சவாங் கூறுகையில், மலை கிராமமான மாடோகோவில் ஒருவர் மண் சரிவில் புதைந்து உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும், வாவில் மூன்று சுரங்கத் தொழிலாளர்கள் உயிருடன் புதைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.