காணாமல் போன தாய்... 20 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்த மகள்!!
மகாராஷ்டிராவில் காணாமல் போன தனது தாயை 20 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியைச் சேர்ந்தவர் யாஸ்மின் ஷேக். இவரது தாய் ஹமிதா பானு துபாய் நாட்டுக்கு சமையல் பணிக்காக சென்றுள்ளார். அதன்பின் அவர் நாடு திரும்பவேயில்லை. அவரை கண்டுபிடிக்க குடும்பத்தினர் பல முறை முயற்சி செய்தும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில், ஹமீதா பானு பாகிஸ்தானில் வசித்து வருவது பாகிஸ்தானில் இருந்து செயல்படும் சமூக வலைதள கணக்கு மூலம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து யாஸ்மின் கூறும்போது, எனது தாயார் ஹமீதா பானு 2 அல்லது 4 ஆண்டு இடைவெளியில் துபாய் சென்று வருவது வழக்கம். கடைசியாக ஏஜென்ட் ஒருவர் உதவியுடன் துபாய் சென்றவர் திரும்பி வரவில்லை. அவரை பல இடங்களில் தேடி கண்டுபிடிக்க முயற்சித்தோம். ஆனால், எங்களது அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
எங்களிடம் அவர் துபாய் சென்றதற்கான ஆதாரம் ஏதும் இல்லாததால், போலீசில் புகார் அளிக்க முடியவில்லை. இது குறித்து ஏஜென்ட்டை தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர், தாயார் எங்களை சந்திக்கவும், பேசவும் விரும்பவில்லை. துபாயில் நலமுடன் உள்ளார். உண்மையை வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என்றார்.
சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ மூலம் தான் தாயார் பாகிஸ்தானில் வசிப்பது தெரியவந்தது. இல்லாவிடில், அவர் துபாய் அல்லது சவுதியில் தான் எங்கோ இருப்பார் என நினைத்து கொண்டிருப்போம் என்று கூறினார்.
அவரை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து அரசு உதவ வேண்டும் என யாஸ்மின் வலியுறுத்தி உள்ளார்.