அமெரிக்காவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு; 4 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழப்பு

 
Kentucky

அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வீடுகள் மற்றும் சாலைகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. கார், பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 25 பேர் வரை பலியாகி உள்ளனர். தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் பணி நடைபெற்று வருகின்றன. இதனால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Kentucky

இதுகுறித்து கென்டகி கவர்னர் ஆண்டி பெஷீர் கூறுகையில், கென்டகி, டென்னசி மற்றும் மேற்கு விர்ஜீனியா உள்ளிட்ட மாகாணத்தின் பல பகுதிகளின் தேசிய பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சமீப நாட்களில் வான் மற்றும் நீர் வழியே நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டு உள்ளதாகவும் 5 கவுண்டி பகுதிகளில் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன என்றும் கூறியுள்ளார்.

எனினும், திடீரென மின் வினியோக பாதிப்பு ஏற்பட்டதில் 13 ஆயிரத்திற்கும் கூடுதலான வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அமெரிக்காவில் பல கவுண்டி பகுதிகளில் வெள்ள நீரில் வீடுகள் அடித்து செல்லப்பட்டு விட்டன. வெள்ள பாதிப்பினால், சிலர் வீட்டின் மேற்கூரையில் தஞ்சம் அடையும் சூழலும் காணப்பட்டது. சில பகுதிகளில் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கே சில ஆண்டுகள் ஆகும் எனவும் கூறியுள்ளார்.

Kentucky

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த வெள்ளப்பெருக்கை ஒரு பேரிடர் என அறிவித்து உள்ளார். கென்டகியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவ வேண்டிய அதிகளவிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் எனவும் கூறியுள்ளார்.

From around the web