அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் 21-வது நினைவு தினம்; விண்வெளியில் இருந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த நாசா!!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிராங்க் கல்பர்ட்சன் என்பவர் எடுத்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த 110 அடுக்குமாடிகள் கொண்ட இரட்டை கோபுரத்தை கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி தேதி அல்-காய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 25 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 184 பேர் உயிரிழந்தனர்.
இந்த கோர சம்பவத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது. பென்டகனில் நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் பங்கேற்று தாக்குதலில் உயிரிழந்தவர் களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் 9/11 பயங்கரவாத தாக்குதல்களின் நினைவாக அன்றைய நாளில் நாசாவின் விண்வெளி வீரர்களில் ஒருவர் விண்வெளியில் இருந்து நியூயார்க் நகரத்தை எடுத்த புகைப்படத்தைப் நாசா ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. செப்டம்பர் 11, 2001 ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிராங்க் கல்பர்ட்சன் என்பவர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் மன்ஹாட்டனில் தாக்குதலின் போது பெரும் புகை மூட்டம் எழுவதைப் பார்க்க முடிகிறது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அந்த பயங்கரமான நாளின் 21வது ஆண்டு நினைவு நாளில், 9/11 தீவிரவாத தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் மாவீரர்களை நாங்கள் கவுரவிக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.