ஏமனில் படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பரிதாப பலி... திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம்!!

 
Yemen

ஏமனில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது படகு கவிழ்ந்து 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் ஹொடைடா என்ற துறைமுக நகரம் உள்ளது. இங்குள்ள அல்லுஹேயா என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் செங்கடலில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய தீவான கமரன் தீவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள படகில் புறப்பட்டனர். பெண்கள், சிறுவர்கள் உள்பட 27 பேர், படகில் இருந்தனர்.

water

இந்த படகு ஹொடைடா நகர் அருகே செங்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். இது குறித்து தகவல் அறிந்து கடலோர காவல்படையினர் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

அதற்குள் 12 பெண்கள், 7 சிறுவர்கள் மற்றும் 2 ஆண்கள் என 21 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதே சமயம் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிய 6 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. 

Dead Body

அதே சமயம் கடலில் வீசிய பலத்த காற்றினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 21 பலியானது ஏமனில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் ஏமனில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web