கிரீஸ் நாட்டில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து... பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு

கிரீஸ் நாட்டில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
கிரீஸின் தலைநகர் ஏதென்சில் இருந்து அந்த நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான தெசலோனிகிக்கு 2 தினங்களுக்கு முன்பு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரயிலில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 350-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த ரயில் நள்ளிரவில் டெம்பே அருகே அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்திசையில் தெசலோனிகியில் இருந்து லாரிசா நகர் நோக்கி சென்ற சரக்கு ரயில் ஒன்று எதிர்பாராதவிதமாக பயணிகள் ரயில் சென்ற அதே தண்டவாளத்தில் வந்தது. இதில் சரக்கு ரெயிலும், பயணிகள் ரயிலும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. இதில் 2 ரயில்களிலும் பல பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி அருகில் உள்ள வயலில் விழுந்தன.
இரண்டு ரயில்களும் அதிவேகத்தில் வந்து மோதிக்கொண்டதால் சில பெட்டிகள் முற்றிலுமாக உருக்குலைந்து, சில பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன. இதில் அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலம் எழுந்தது. இரண்டு ரயில்களும் மோதியபோது நிலநடுக்கம் ஏற்பட்டது போல அந்த பகுதியில் பயங்கர அதிர்வு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் என 100-க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நள்ளிரவு நேரம் என்பதாலும், விபத்து நடந்த பகுதியை புகை மண்டலம் சூழ்ந்திருந்ததாலும் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. எனினும் மீட்பு குழுவினர் பிளாஸ் லைட்டுகளை பயன்படுத்தி மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். அவர்கள் விபத்தில் உருக்குலைந்து கிடந்த ரயில் பெட்டிகளை வெட்டி அதனுள் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர்.
Συγκλονιστικό βίντεο#Τεμπη #Τεμπη_Τραγωδια #hellenic_train #συγκρουση_τρενων#GreeceTrainAccident pic.twitter.com/QmqWnWbUXI
— KlaiMan_Poutsarley_official 😎😎😎😎😎 ! ! ! Μaik (@klaimanpoutsarl) March 1, 2023
விடியவிடிய மீட்பு பணிகள் தொடர்ந்தன. எனினும் இந்த கோர விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 26 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிர் திசையில் 2 ரயில்கள் எப்படி வந்தது என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.