இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 15 பேர் விடுதலை.. இலங்கை நீதிமன்றம் உத்தரவு!!

 
fisherman

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கச்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டுவதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. இதனால் மனம், உடல், பொருளாதார ரீதியாக தமிழ்நாடு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கடலுக்கு செல்லும் மீனவர்கள் கரை திரும்புவதும், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையும் நீடித்து வருகிறது.

அதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதோடு அவர்களின் மீன்பிடி படகு ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Fisherman

இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சிறுவன் உள்பட 15 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கான நீதிமன்ற காவல் இன்று முடிவ டைந்தது. இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, 15 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் விடுவிக்கப்பட்ட 15 பேரும் மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடிக்க வந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதி, படகின் உரிமையாளர் 6 மாதத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவித்தார்.

Srilanka-court

விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ஒரு சில தினங்களில் நாடு திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளனர்.

From around the web