பள்ளியில் 12 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் குழந்தை பலி.. பின்லாந்தில் அதிர்ச்சி சம்பவம்

 
Finland

பின்லாந்தில் 12 வயது சிறுவன் பள்ளி வளாகத்தில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு ஐரோப்பா நாடான பின்லாந்தின் வான்டா நகரில் மிகவும் பிரபலமான வீர்டோலா பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 800 பேர் படிக்கின்றனர். ஆசிரியர்கள், பணியாளர்கள் என சுமார் 90 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

gun

இந்த நிலையில் இன்று பள்ளி வளாகத்திற்குள் 12 வயது சிறுவன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த குழந்தைகளை நோக்கி சுட்டான். இதனால் குழந்தைகள் அலறியடித்து அங்குமிங்கும் ஓடினர். துப்பாக்கி சூட்டில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன், அதே வயதுடைய இரண்டு குழந்தைகள் பலத்த காயமடைந்தன.

தகவல் அறந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தாக்குதல் நடத்திய சிறுவனை கைது செய்து காவலில் வைத்துள்ளனர். துப்பாக்கிச்சூடு குறித்து அறிந்த பெற்றோர், தங்கள் குழந்தைளை பார்ப்பதற்காக பள்ளி முன் திரண்டனர். பள்ளி வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Finland

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் கடும் அதிர்ச்சி அடைந்ததாக பிரதமர் பெட்டேரி ஓர்போ தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் பிற மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் கூறி உள்ளார்.

From around the web