கபடி ஆடிய இளைஞர்.. சட்டென பலியான பரிதாபம்.. தமிழ்நாடு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு!!
![Manickam](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/fdac5c11152faf6e9dfe6cb188345caf.jpg)
குளித்தலை அருகே கபடி போட்டியில் பங்கேற்ற 26 வயதான இளைஞர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பாளையம் அருகே காசக்கரன்பட்டி பகுதியைச் வசித்து வருபவர் தங்கவேல். இவரது மகன் மாணிக்கம் (26). இவர் கரூரில் உள்ள டெக்ஸ்டைலில் பணிபுரிந்து வந்தார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணக்கப்பிள்ளையூரில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று வந்துள்ளார். நேற்று இரவு இரண்டு சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்று போட்டிக்காக காத்திருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
நெஞ்சு வலிப்பதாக அருகில் இருந்த நண்பர்களிடம் கூறியதையடுத்து அவர்கள் வாகனத்தின் மூலம் அருகில் உள்ள அய்யர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல் குளித்தலை அரசு மருத்துவமனை சவக்கடங்கில் வைக்கப்பட்டுள்ளது. கபடி போட்டியில் பங்கேற்று விளையாட வந்த இடத்தில் 26 வயதான இளைஞர் திடீரென மாராடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மாரப்படைப்பால் உயிரிழந்த கபடி வீரர் மாணிக்கத்தின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரூர் மாவட்டம் சத்தியமங்கலம் கிராமம் கணக்குப்பிள்ளையூரில் சிறுவர்கள் இடையேயான கபடி விளையாட்டிற்கு சிறுவர்களை அழைத்து வந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம், பாளையம் அஞ்சல் கரிச்சிகாரன்பட்டியைச் சேர்ந்த பயிற்சியாளர் மாணிக்கம் (வயது 26) என்பவர் சிறிது நெஞ்சு வலி இருந்தும் தொடர்ந்து பயிற்சி அளித்துள்ளார்.
போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நெஞ்சுவலி மிகுதியாக இருந்ததால் அவரை அய்யர்மலை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளரின் குடும்பத்தினர் மற்றும் அவரது மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.