விழுப்புரம் அருகே தொழிலாளியின் காதை கடித்து துப்பிய வாலிபர்.. பிறந்தநாள் விழாவில் பயங்கரம்

 
Fight

விக்கிரவாண்டியில் உறவினர் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் இருகுடும்பத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் காதை கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பெரியகாலனி மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆனந்தவேல். இவரது மனைவி சரண்யா (35). இவருக்கும், ஆனந்தவேலின் தம்பியான தொழிலாளி லட்சுமணன் என்பவருக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் இவர்களது உறவினர் ஒருவரது குழந்தையின் முதல் பிறந்தநாள் விழா, நேற்று முன்தினம் மாலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சரண்யா மற்றும் லட்சுமணன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மண்டபத்தில் இருந்து வெளியே வந்தனர். அப்போது, சரண்யாவின் அண்ணன் சக்கரவர்த்தி (37) எச்சில் துப்பியுள்ளார்.

villupuram

இதை பார்த்த லட்சுமணன் மனைவி திவ்யா ஏன் என்னை பார்த்து எச்சில் துப்புகிறாய் என்று கேட்டார். இதனால் இருகுடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். அப்போது சக்கரவர்த்தியின் தம்பி சங்கர் (34) என்பவர் லட்சுமணனின் வலது புற காதை கடித்து கீழே துப்பினார். 

வலியால் அலறி துடித்த லட்சுமணனை அங்கிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று திவ்யா, சக்கரவர்த்தி, சரண்யா ஆகியோரும் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Vikravandi

இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசில் இரு தரப்பினரும் தனித்தனியாக புகார் செய்தனர். அதன்படி லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் சக்கரவர்த்தி, சரண்யா, சங்கர், சக்கரவர்த்தியின் மனைவி இளவழகி ஆகியோர் மீதும், சக்கரவர்த்தி கொடுத்த புகாரின் பேரில் லட்சுமணன், திவ்யா ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web