மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி.. துணி காய வைத்த போது விபரீதம்!

தாளவாடி அருகே மின்சாரம் தாக்கி இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்து உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி நாராயணன் (50). இவரது மகள் ஜோதி (26). இவருக்கும் கர்நாடக மாநிலம் சிக்கமங்களூர் மாவட்டம் எம்சள்ளி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் (33) என்பவருக்கும் கடந்த 6 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 4 வயதில் ரக்ஷனா என்ற பெண் குழந்தை உள்ளது.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன் ஜோதி, தனது கணவரைப் பிரிந்து மகளுடன், தந்தையின் வீட்டில் தனியாக வசித்து வந்தார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இவர்கள் வீட்டில் இருந்து விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக கரண்ட் எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் ஜோதி துணி துவைத்து விட்டு துணியை அங்கு வழக்கம் போல் காய வைக்கும் கம்பியில் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் வலியில் சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்த அவருடைய சித்தப்பா கெம்பராஜ் விரைந்து சென்று ஒரு குச்சியால் அடித்து கீழே தள்ளியுள்ளார்.
பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த தாளவாடி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.