காய்கறி மார்க்கெட்டில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்.. கணவனுடன் தகாத உறவில் இருந்ததால் மனைவி வெறிச்செயல்!

 
Tiruvallur Tiruvallur

திருவள்ளூர் அருகே மார்க்கெட்டில் ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் ராமர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பார்வதி (36). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண், பெண் குழந்தை உள்ளது. சுரேஷ் திருவள்ளூர் மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளார். சுரேசுக்கும் புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்த ராஜேஸ்வரி (40) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. 

பின்னர் அவர்கள் இருவரும் குடும்பத்தினருக்கு தெரியாமல் புட்லூர் அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் ராஜேஸ்வரி திருவள்ளூரில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் சுரேசின் காய்கறி கறிகடைக்கு ராஜேஸ்வரி அடிக்கடி வந்து வியாபாரம் செய்தார். இதனை அறிந்த சுரேசின் மனைவி பார்வதி கண்டித்தார். மேலும் ராஜேஸ்வரியை கடைக்கு வரக்கூடாது என்று எச்சரித்துள்ளார். எனினும் கடந்த 9-ம் தேதி ராஜேஸ்வரி மீண்டும் சுரேசின் காய்கறி கடைக்கு வந்து வியாபாரத்தில் ஈடுபட்டார்.


இதனால் ஆத்திரம் அடைந்த பார்வதி மற்றும் அவரது உறவினர்கள் மார்க்கெட்டிற்கு வந்து கடையில் இருந்த ராஜேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது பார்வதி மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ராஜேஸ்வரி மீது ஊற்றியுள்ளார். அந்த நேரத்தில் பின்னால் இருந்த விளக்கிலிருந்து ராஜேஸ்வரி மீது தீப்பற்றியது. இதில் உடல் முழுவதும் 80 சதவீத தீக்காயத்துடன் ராஜேஸ்வரி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பார்வதி, அவரது கணவர் சுரேஷ் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 6 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.

Tiruvallur

இதையடுத்து திருவள்ளூர் டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர். இதற்கிடையே மார்க்கெட்டில் ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றிய வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

From around the web