குழந்தைகளுடன் பெண் காவலர் தற்கொலை.. மதுரையில் நடந்த பயங்கரம்!

 
Madurai

சமயநல்லூர் அருகே பெண் காவலர் ஒருவர் இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மனைவி ஜெயலட்சுமி (30). இந்த தம்பதிக்கு காளிமுத்து ராஜா (8) என்ற மகனும், பவித்ரா (7) என்ற மகளும் இருந்தனர். ஜெயலட்சுமி மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் சமீபத்தில் திருச்சி ரயில்வே காவல் நிலையத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். 

train-suicide

பிள்ளைகளை பிரிந்ததால் ஜெயலட்சுமி மன உளைச்சல் ஏற்பட்டு கடந்த சில நாட்களாக மருத்துவ விடுப்பில் இருந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை தனது இரண்டு குழந்தைகளுடன் ஜெயலட்சுமி சமயநல்லூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

காவலர் சீருடையுடன் பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிதறி கிடந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Police

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

From around the web