பதுங்குக்குழி பழனிசாமி பாஜக அரசை கண்டிப்பாரா? செந்தில் பாலாஜி கேள்வி!!

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டு பள்ளிகளுக்கு கல்விக்கான நிதியை ஒதுக்க முடியும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கூறியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைக் கண்டிக்க எடப்பாடி பழனிசாமி முன்வருவாரா என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை டப்பிங் பழனிசாமி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்த நிலையில், பதுங்குக்குழி பழனிசாமி என்று வசை பாடியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செந்தில்பாலாஜி, ”மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என பகிரங்கமாக ஒன்றிய கல்வி அமைச்சர் மிரட்டி இருக்கிறார். 'தமிழ்நாட்டு மக்களை Blackmail செய்யும் நோக்கோடு திமிராக நடந்தால் தமிழ்நாட்டு மக்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்' என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் தமிழ்நாட்டு உரிமைகளில் அக்கறையும் கொண்ட அனைவரும் ஒன்றிய பாஜக அரசின் தடித்தனத்தை எதிர்த்து வருகிறார்கள். வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டு, தனிப்பட்ட பிரச்சனைகளைக் கூட மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக திரித்து திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார்?
சிறு சிறு விவகாரங்களை ஒதுக்கிவிட்டு மாநில பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டாமா? இந்த விவகாரத்திலாவது டப்பிங் குரலில் பதில் சொல்லாமல் நேரடியாய் பதில் சொல்லும் துணிவுள்ளதா பதுங்குக்குழி பழனிசாமிக்கு? இரு மொழிக் கொள்கையே தாரக மந்திரம் என்பதை கொள்கை முழக்கமாக முழங்கிய பேரறிஞர் பெயரை வைத்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் என கூறிக்கொண்டு ஒன்றிய பாஜக அரசை கண்டிக்கக் கூட துப்பில்லாமல் ஒளிந்திருக்கும் பழனிசாமி அவர்கள் தயவு செய்து அண்ணாவின் பெயரை விட்டுவிட வேண்டும்.
எதிரிகள் மட்டுமல்லாது துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,” என்று கூறியுள்ளார்