உடல்நலக்குறைவால் உயிரிழந்த மனைவி.. சோகத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

 
Kanniyakumari

கன்னியாகுமரி அருகே மனைவி இறந்த 3 மாதத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (48). கூலித்தொழிலாளியான இவர் தக்கலை அருகே கோழிப்போர்விளையில் உள்ள ஒரு பன்றி பண்ணையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நேவிஸ் (45). இந்த தம்பதிக்கு பிபின் (21) என்ற மகன் உள்ளான். மகன் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

Suicide

இந்த நிலையில் மனைவி நேவிஸ் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்தார். அதன்பின்பு விஜயகுமார் மிகவும் சோகத்தில் இருந்தார். மேலும் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் அவரது உடல்நிலை பலகீனமானது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயகுமார் தான் வேலை பார்க்கும் பன்றி பண்ணையில் உள்ள அறையில் தூங்க சென்றார்.

நேற்று காலையில் வெகுநேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அவருடன் வேலை பார்க்கும் ராபி என்பவர் அறையில் சென்று பார்த்தார். அங்கு விஜயகுமார் மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

Thuckalay PS

அவர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு விஜயகுமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தக்கலை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

From around the web