எது மகிழ்ச்சி? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்!! செல்வப் பெருந்தகை பாராட்டு!!

 
Stalin Selvaperunthagai

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டு மாணவர் சிவச்சந்திரன் ஐஏஸ் ஐபிஎஸ் தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதலிடம் பிடித்ததற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கத்துடன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

”நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த" நான் முதல்வன்” திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது! என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நான் முதல்வன் திட்டத்தின் இந்த வெற்றிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். “யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது இந்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம். அதில் உயர்கல்வியை நோக்கிய ஒரு பயணத்திட்டமான நான் முதல்வன் திட்ட போட்டி தேர்வுகள் பிரிவு மூலம் பயிற்சி பெற்ற திரு.சிவச்சந்திரன் அவர்கள் அகில இந்திய அளவில் தரவரிசையில் 23ம் இடமும், தமிழ்நாட்டில் முதலிடம் பெற்றுள்ள செய்தியறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தேர்ச்சி பெற்ற 50 பேரில் 18 நபர்களும் நான் முதல்வன் திட்டத்தில் முழுநேரமும் தங்கியிருந்து பயிற்சி பெற்றவர்கள் என்பதும், தமிழ்வழியில் தேர்வு எழுதிய காமராஜர், சங்கர் பாண்டியராஜ் ஆகியோர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

நான் முதல்வன் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் எந்த நோக்கத்திற்காக கொண்டு வந்தார்களோ, அது முழுமையாக நிறைவேறியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று தேவையில்லை. இந்நேரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.“ என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.


 

From around the web