விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. பாமக வேட்பாளர் அறிவிப்பு

 
PMK

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதைத் தொடா்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், 6 மாதங்களுக்குள் இடைத்தோ்தல் நடத்தப்பட வேண்டும். இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த  10-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி, விக்கிரவாண்டி தொகுதியில் அடுத்த மாதம்  10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

Vikravandi

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் என்று  அண்ணாமலை நேற்று அறிவித்தார்.

இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளராக சி.அன்புமணி  அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக  மாநிலத்  துணைத் தலைவர் சி.அன்புமணி  போட்டியிடுவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

PMK

விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.அன்புமணி கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். 2016-ம் ஆம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதியில்  பாமக தனித்து களமிறங்கியது. இதில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி 41,428 வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்தார். திமுக சார்பில் போட்டியிட்ட ராதாமணி  63,757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.வேலு 58,845 வாக்குகள் பெற்று 2-வது இடம் பிடித்தார். 

From around the web