நீட் தேர்வால் எதிர்பாராத மாற்றங்கள்... திமுக எம்.பி அப்துல்லா பெருமிதம்!!

 
Ovianjali

நேற்று வெளியான ப்ள்ஸ் 2 தேர்வு முடிவில் ஓவியாஞ்சலி என்ற வணிகவியல் துறை மாணவி 600க்கு 599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் மாணவி ஓவியாஞ்சலிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றது 

ஓவியாஞ்சலியின் சாதனை குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் முகநூலில் எழுதியிருப்பதாவது,

”சமீப வருடங்களாக ஒன்றைக் கவனித்தீர்களா?  முன்பெல்லாம் +2 வில் மாநில அளவில் முதல் இடங்களைப் பிடிப்பது மேக்ஸ் சயின்ஸ் குரூப் மாணவர்களாகவே இருப்பார்கள்.  தற்போது  அந்த இடத்தை காமர்ஸ் மாணவர்களும் பெறுகிறார்கள்!!  

நீட் என்ற தேர்வு வருவதற்கு முன்பு பெற்றோருக்கும் சரி மாணவர்களுக்கும் சரி மதிப்பான படிப்பென்றால் அது டாக்டர் தான் என்ற மனநிலை இருந்தது. எனவே பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் நேரடியாக மேக்ஸ் சயின்ஸ் குரூப்பிற்கு சென்று விடுவார்கள். +2 முடித்த பிறகு டாக்டர் அல்லது இஞ்சீனியர் படிக்க போய் விடுவார்கள்.

பத்தாம் வகுப்பில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கான குரூப் தான் காமர்ஸ் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது! ஆனால் டாக்டருக்குப் படிக்க நீட் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பலரின் கவனம் ஆடிட்டர் படிப்பின் பக்கம் திரும்பியது.

காரணம் நீட் படிக்கவே லட்சக்கணக்கில் செலவாகும் எனும் போது பெரிய செலவின்றி ஆடிட்டருக்குப் படித்து விடலாம் என்ற மனநிலை உருவானது. எனவே பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் கூட காமர்ஸ் குரூப் பக்கம் திரும்பும் சூழல் உருவானது!!

இதனால் உயர்சாதியினர் மட்டுமே “தன்னந்தனியாக” கோலோச்சிய ஆடிட்டர் துறையில் தற்போது பி.சி , எம்.பி.சி , எஸ்.சி மாணாக்கர்களும் மெல்ல மெல்ல உள்ளே நுழையத் துவங்கி விட்டனர். 

தமிழகத்தைப் பொறுத்த அளவில் உயர்சாதியினர் தங்கள் பிடியில் இறுதியாக வைத்திருந்த துறை நிதி நிர்வாகமும் ஆடிட்டிங்கும் தான்!! 

தற்போது அதையும் நீட்டால் இழக்கத் துவங்குகின்றனர். நீட் என்ற ஒன்று வந்திருக்காவிட்டால் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூக மாணவர்களின் கவனம் ஆடிட்டர் படிப்பின் பக்கம் திரும்பியே இருக்காது!!

நீட்டை கொண்டு வந்தது அவர்கள் செய்த வாழ்நாள் தவறு!! பனிரெண்டாம் வகுப்பில் முதலிடம் பெற்ற அந்த காமர்ஸ் மாணவிக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்” என்று அப்துல்லா எம்.பி. கூறியுள்ளார்.

From around the web