டிடிவி தினகரன் ‘அம்மா’ படத்தை பயன்படுத்தலாம்.. எடப்பாடி பழனிசாமி திடீர் பல்டி!!

அதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த டிடிவி தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கருப்பு வெள்ளை கொடியின் மத்தியில் வெள்ளை கலரில் ஜெயலலிதா படத்துடன் கொடியையும் அறிமுகப்படுத்தினார். கருப்பு சிவப்பு மத்தியில் வெள்ளைக் கலரும் ஜெயலலிதா படமும் உபயோகிக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக தரப்பில் வழக்கு தாக்கல் செய்தனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதிமுக தரப்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கவுதம்குமார் இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக மனு தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆர்.கே.பி தமிழரசி வழக்கை முடித்து வைத்தார்.
டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெறுவதன் மூலம் அவருடன் இணக்கமான போக்கை ஏற்படுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவை மீட்பதே என் லட்சியம் என்று கூறி வந்த டிடிவி தினகரன் அதிமுகவில் மீண்டும் இணைவாரா அல்லது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடர்வாரா என்று தெரியவில்லை. வைகோவின் மதிமுக போல் அதிமுகவுடன் தனிக்கட்சியாக இருந்து, இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.