சிறுவன் கையில் டிராக்டர்... பறிபோன 10-ம் வகுப்பு மாணவன் உயிர்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!!

புளியங்குடி அருகே ப்ளஸ்-1 மாணவன் இயக்கிய டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவன் உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அடுத்து உள்ள அரியூரை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரதி மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு மனோஜ் பாண்டி (15) என்ற மகனும், முத்து (12) என்ற மகளும் உள்ளனர். இதில் மனோஜ் பாண்டி நெற்கட்டும்செவல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். முத்து 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் இவர்களது உறவினர் ஒருவரின் மகன் ப்ளஸ்-1 படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 21-மு தேதி மாலை ப்ளஸ்-1 மாணவர், அவரது உறவினரான கருத்தப்பாண்டி (40) என்பவரது டிராக்டரை அப்பகுதியில் உள்ள வயலில் ஓட்டிக் கொண்டிருந்தார். டிராக்டரின் பின்புறம் ரொட்டேட்டர் பொருத்தப்பட்டு வயலை உழுது கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு வந்த மனோஜ் பாண்டி, டிராக்டரின் பக்கவாட்டில் கால் வைத்து ஏற முயன்றதாகவும் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக மனோஜ் பாண்டி தவறி கீழே விழுந்தான்.
இதனால் டிராக்டரின் பின்பக்க சக்கரம் மற்றும் அதன் அருகே பொருத்தப்பட்டிருந்த ரொட்டேட்டர் எந்திரத்தில் அவன் சிக்கினான். இதில் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே மனோஜ் பாண்டி பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் மற்றும் போலீசார் மனோஜ் பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ப்ளஸ்-1 மாணவர் மற்றும் டிராக்டர் உரிமையாளர் கருத்தப்பாண்டி ஆகிய இருவரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.