ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சுற்றுலா பயணி... அதிர்ச்சி வீடியோ!!

ஒகேனக்கல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சுற்றுலா பயணியை இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு பத்திரமாக மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் உள்ள சுற்றுலா தளமான ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் சவாரி செய்வதற்கும் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது விடுமுறைக்காலம் என்பதால், சுற்றுலா பயணிகளின் வருகை சற்று அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரகு. இவர் தனது குடும்பத்துடன் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்துள்ளார். அங்குள்ள அருவியில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பாறையில் வழுக்கி விழுந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக் கண்ட சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டனர்.
உடனடியாக இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் வர தாமதமானதால் அங்கிருந்த இளைஞர்கள் சரவணன், ராஜசேகரன், அரவிந்த்குமார் ஆகியோர் ஆற்றில் குதித்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டடது.