இன்றைய முக்கியச் செய்தி செந்தில் பாலாஜி தான்.. அடுத்து என்ன?

 
Senthil Balaji Stalin

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஏப்ரல் 29ம் தேதி நிறைவடைகிறது. கூட்டத்தொடர் முடிந்ததும் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று உறுதியாகக் கூறப்படுகிறது. நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில், தமிழ்நாட்டில் உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணை இல்லாமல் சிறை தண்டனை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிமுகம் செய்ய இருப்பதாக பேரவை நிகழ்வுகள் பட்டியலில் கூறப்பட்டிருந்தது. ஆனால், திடீரென அதில் மாற்றம் செய்யப்பட்டு, மசோதாவை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

ஏப்ரல் 28ம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்திருப்பதால் கூட்டத்தொடர் முடிவடையும் வரையிலும் அவரால் அமைச்சராக நீடிப்பதில் சட்டச்சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியும் முதலமைச்சருக்கும் திமுக ஆட்சிக்கும் இடையூறு ஏதும் வராமல் இருப்பதையே விரும்புவதாகத் தெரிகிறது. அனேகமாக நாளை செந்தில்பாலாஜியின் ராஜினாமா செய்தி வர வாய்ப்புள்ளது. அது நீதிமன்ற விசாரணைக்கு முன்பா அல்லது பின்னரா என்பதில் தான் வேறுபாடு இருக்க வாய்ப்புள்ளது.

செந்தில்பாலாஜிக்குப் பதிலாக வேறு ஒரு அமைச்சரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமிக்கப் போவதில்லையாம். எப்போது தனக்கு சாதகமான நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்று வருகிறாரோ அடுத்த நாளே மீண்டும் அவருக்கு முக்கியத் துறைகளுடன் அமைச்சர் பதவி உறுதியளிக்கப்பட்டுள்ளதாம். அமைச்சராக இல்லாவிட்டாலும் கோவை, கரூர் மாவட்டப் பொறுப்பு செந்தில் பாலாஜியிடமே இருக்கும். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா அல்லது சு.முத்துசாமி நியமிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

வனத்துறை அமைச்சர் பொன்முடிக்கு வேறு ஒரு சிக்கல் இருக்கிறது. திமுகவில் அவருடைய செல்வாக்கு முடிவடைந்து விட்டதாகத் தெரிகிறது. பொன்முடிக்கு ஓய்வு கொடுத்து விட்டு அவருடைய மகனுக்கு அடுத்த தலைமுறை வரிசையில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தெரிகிறது.

From around the web