மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள்!

 
TNEB

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

ஒன்றிய அரசின் உத்தரவை தொடர்ந்து வங்கி கணக்குகள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும், மின் மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டது.

EB-Aadhar

மின் இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம், தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் முடியும் என அரசின் தரப்பில் கூறப்பட்டது. நேற்று முன்தினம் மாலை வரை வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி , விவசாய இணைப்பு என 2.34 கோடி மின் இணைப்புகள் ஆதார் உடன் இணைக்கப்பட்டதாக தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது. இது மொத்தம் உள்ள 2.67 கோடி இணைப்புகளில் 87.44 சதவீதம் ஆகும்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க முதலில் கடந்த மாதம் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர், கூடுதலாக ஒரு மாதம் வழங்கப்பட்ட நிலையில், அந்த அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இன்னும் 33 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

EB-Aadhar

எனவே, ஆதாருடன் மின் இணைப்பை சேர்ப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

From around the web