மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் பரிதாப பலி.. பிறந்தநாளன்றே உயிரிழந்த சோகம்!

தர்மபுரி அருகே மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இளங்காலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு அகிலேஷ் (3) என்ற மகனும், ஒரு மாத பெண் குழந்தையும் உள்ளது. சதீஷ்குமாரின் மனைவி ஐஸ்வர்யா, தாய் வீடான பெரும்பாலை அருகே எட்டிக்குழி கிராமத்தில் வசித்து வந்தார்.
அந்த பகுதியில் குடிநீர் தேவைக்காக அரசு சார்பில் மினி டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான மோட்டார் பழுதாகி நீண்ட நாட்களாக ஆகிறது. அந்த மோட்டார் சரி செய்வதற்காக கழட்டி சென்றுள்ளனர். ஆனால் அதற்கான மின்சார ஒயர்களை ஆங்காங்கே ஆபத்தான முறையில் தொங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறியாத சிறுவர்கள், அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை சதீஷ்குமாரின் மகன் அகிலேஷ் கவனக்குறைவாக தொங்கி கொண்டிருந்த மின்ஒயரை தொட்டதாக தெரிகிறது. இதில் சிறுவன் அகிலேஷ் தூக்கி வீசப்பட்டான்.
இதனைக் கண்ட அப்பகுதியினர் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தான். பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.