மிளகாய்பொடி கலந்த கொதிக்கும் நீரை ஊற்றி கணவரை கொன்ற மனைவி! திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்!!

திருவெறும்பூரில் கொதிக்கும் நீரில் மிளகாய்தூள் கலந்து ஊற்றி கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (27). இவரது மனைவி டயானா மேரி (22). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. ஆட்டோ ஓட்டுநரான செல்வராஜ் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டயானா பலமுறை கண்டித்தும் அவரது கணவர் திருந்தவில்லை.
இதற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரிடம், கோபித்துக் கொண்டு அதே பகுதியில் வசித்து வரும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அதன்பின், அவர் கணவர் வீட்டுக்கு திரும்ப செல்லவில்லை. உறவினர்கள் சமரசம் செய்து வைத்தும் அதனை டயானா ஏற்கவில்லை.
இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி செல்வராஜ் மனைவியைத் தேடி மாமியார் வீட்டுக்குச் சென்றார். அப்போது டயானா மேரியிடம் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் ஒப்புக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், மனைவி டயானா மேரியை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற டயானா மேரி வீட்டில் இருந்த அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரில் மிளகாய் பொடியை கலந்து எடுத்து வந்து சற்றும் யோசிக்காமல் கணவர் மீது ஊற்றிவிட்டார். இதில் உடல் வெந்து செல்வராஜ் வலியால் அலறி துடித்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் செல்வராஜ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். மனைவி ஊற்றிய சுடுநீர் அவரது அடிவயிற்றில் பட்டு ஆழமான காயம் ஏற்பட்டதால் கிட்னி பாதித்து இறந்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் செல்வராஜின் மனைவி டயானா மேரி, மாமியார் இன்னாசியம்மாள் (43) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் போலீசார் நடநத்திய விசாரணையில் கொலையான செல்வராஜ், தனது மாமியாருடன் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும், அதனை மனைவி மற்றும் மாமியார் கண்டித்தபோதும், தொடர்ந்து அவர் அத்துமீறலில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் கொதிக்கும் நீரில் மிளகாய் பொடியை கலந்து ஊற்றி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கைதான அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர்.