வெடித்து சிதறிய வாஷிங்மெஷின்.. தஞ்சாவூரில் பரபரப்பு!

 
Thanjavur

தஞ்சாவூரில் வீட்டில் வாஷிங்மெஷின் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கீழவாசல் கவாஸ்கார தெருவை சேர்ந்தவர் சிவகிரிநாதன் (55). இவரது மனைவி புவனேஸ்வரி. இவர் கீழவாசல் கடைவீதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ் பகுதியில் மாமனார் சுந்தரம், மாமியார் கமலம் வசித்து வருகின்றனர். மாடி வீட்டில் சிவகிரிநாதன் மனைவியுடன் வசித்து வருகிறார்.

Thanjavur

இந்த நிலையில், புவனேஸ்வரி வழக்கம்போல இன்று காலை 6 மணி அளவில் துணி துவைப்பதற்காக வாஷிங்மெஷினில் துணிகளை போட்டு விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அவரது கணவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, வாஷிங்மெஷின் பயங்கர சத்தத்துடன் வெடித்து எரிந்துள்ளது. இதனால் வீட்டில் இருந்த மற்ற பொருள்களிலும் தீ பரவிய நிலையில் வீடு முழுவதும் கரும் புகை சூழ்ந்தது.

இந்நிலையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிவகிரிநாதன் சத்தம் கேட்டு எழுந்து பதறி அடித்துக் கொண்டு வெளியே சென்று அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Police

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் வாஷிங்மெஷின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் வாஷிங்மெஷின் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த பயங்கர தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. இது குறித்து கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக வாஷிங்மெஷின் வெடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web