துணைக் குடியரசுத்தலைவர் பதவி விலக வேண்டும்... வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!!

உச்சநீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்த துணைக் குடியரசுத்தலைவர் ஜகதீப் தன்கர் பதவி விலக வேண்டும் என்று திருப்பூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக பாஜ எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோர் விமர்சனம் செய்து கருத்து தெரிவித்திருந்தனர். உச்சநீதிமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையில் கருத்து தெரிவித்த குடியரசு துணைத்தலைவரை கண்டித்து, திருப்பூர் நீதிமன்றம் எதிரே வக்கீல்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் மற்றும் பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே ஆகிய இருவரையும் கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். உடனடியாக இருவரும் பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.