வெள்ளைக்கொடி காட்டும் ஆளுநர்... என்ன செய்யப் போகிறார் முதலமைச்சர்!!

தமிழ்நாடு பல்கலைக் கழகங்களின் வேந்தர் பொறுப்பிலிருந்து சட்டத்திருத்தங்கள் மூலம் ஆளுநர் நீக்கப்பட்டுள்ள நிலையில், உதகையில் துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டியுள்ளார். இதில் பங்கேற்க வருமாறு துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆளுநர் தொடர்பான வழக்கின் தீர்ப்பை விமர்சனம் செய்த துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரை அழைத்து, இந்த விவகாரத்தை மேலும் சர்ச்சைக்குரியதாக்குகிறார், நீதிமன்ற அவமதிப்பு செய்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தை எப்படி அணுகும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தது.
துணைவேந்தர்கள் பங்கேற்க கூடாது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல் அனுப்பப்பட்டதாக ஒரு செய்தியும் உலவுகிறது. இந்நிலையில் இது ஜனவரி மாதமே திட்டமிடப்பட்ட நிகழ்வு, தமிழ்நாடு அரசுடன் அதிகார மோதல் என்று தவறாக சித்தரிக்கப்படுகிறது என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் ஆதரவைக் கோரும் விதமாகவே இந்த அறிக்கை இருப்பதாகத் தெரிகிறது. ஆளுநர் தரப்பு இறங்கி வந்திருப்பதால், முதலமைச்சர் தரப்பிலிருந்தும் மோதல் போக்கு தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி வெளியீடு எண் :13 #செய்திவெளியீடு #ஆளுநர்ரவி #ஆளுநர்மாளிகை pic.twitter.com/6KGSGDFJ6t
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) April 23, 2025