ஆளுநர் ஒரு தபால்காரர் தான்.. அழுத்தம் திருத்தமாகச் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையை கண்டித்த உச்சநீதிமன்றம் அவர் நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக ஒப்புதல் அளித்தது. அதைத்தொடர்ந்து அரசிதழில் வெளியிடப்பட்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டு, துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டத்தையும் நடத்தி முடித்தார்.
ஆளுநர், குடியரசுத் தலைவர் நடவடிக்கைகள் மீது உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று துணைக்குடியரசுத் தலைவர் ஜகதீப் ஜன்கர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. தேசிய ஊடகங்களிலும் விவாதப் பொருளானது. இதைத் தொடர்ந்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயான தபால்காரர் மட்டுமே என்று கூறியுள்ளார்.
”தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதல் தேவை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு, சட்டமன்றத்தின் அதிகாரத்தை ஆளுநர் முடக்க முடியாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. ஜனநாயகத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளது. ஆளுநர் பதவி, நியமிக்கப்பட்ட ஒரு கௌரவப் பதவி மட்டுமே” என்று தெரிவித்துள்ளார் முதலமைச்சர்.
மறுவரையறை குறித்து, மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யப்படக் கூடாது என்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உறுதிமொழியை பிரதமர் மோடி வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையின் நன்மைகளை எடுத்துரைத்த ஸ்டாலின், இந்தி திணிப்புக்கு எதிராகவும், தமிழ்நாட்டின் மொழி அடையாளத்தை பாதுகாக்கவும் தொடர்ந்து போராடுவதாகக் கூறியுள்ளார்.