உடல்நலக்குறைவால் உயிரிழந்த தந்தை... துக்கம் தாங்காமல் மகன் தூக்குப்போட்டு தற்கொலை!

 
Kanniyakumari

கன்னியாகுமரியில் தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் வேம்பு. இவருடைய மகன் ராம்சங்கர் (29). இவர் ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இதற்கிடையே கடந்த 3 மாதத்திற்கு முன்பு வேம்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். தந்தை இறந்ததில் இருந்து ராம்சங்கர் மனம் உடைந்து காணப்பட்டார். இதனால் அவர் மனஉளைச்சலுக்கு உள்ளானார்.

Suicide

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராம்சங்கரின் தாயார் அருகில் உள்ள மகள் வீட்டுக்கு தூங்க சென்றார். ராம்சங்கர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் நேற்று காலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்து மகனை எழுப்ப அறைக்கு சென்றார். அப்போது ராம்சங்கர் மின்விசிறியில் சேலையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராம்சங்கர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Aralvaimozhi PS

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web