சின்னத்திரை நடிகரை துப்பாக்கியால் சுட்ட விவசாயி.. திண்டுக்கல்லில் நடந்த பயங்கரம்!!

திண்டுக்கல் அருகே சின்னத்திரை நடிகரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் அகஸ்தியபுரம் அருகே உள்ள காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது. அந்த நிலத்தை ராஜாக்கண்ணு மற்றும் கருப்பையா ஆகியோருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் விற்றுள்ளார்.
சித்தரவு அருகே உள்ள நெல்லூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா சின்னத்திரை நடிகர் ஆவார். ராஜகண்ணு மற்றும் கருப்பையா இருவரும் உறவினர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த நிலையில் தனபாலின் 5 ஏக்கர் இடத்தை சில தினங்களுக்கு முன்பு நில அளவர்களை வைத்து அளவு செய்யும் பொழுது நாலரை ஏக்கர் நிலமே இருந்து உள்ளது.
அரை ஏக்கர் நிலம் இல்லாததை அறிந்த கருப்பையா தன்னை தனபால் ஐந்து ஏக்கர் எனச் சொல்லி ஏமாற்றிவிட்டதாக கூறி கோபமடைந்துள்ளார். தொடர்ந்து அந்த அரை ஏக்கர் நிலத்திற்கு பணத்தை பெறுவதற்கு தனபால் தோட்ட வீட்டிற்கு கருப்பையாவும் ராஜகண்ணுவும் சென்றுள்ளனர். அங்கு மூவருக்கும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது தனபால் வீட்டிற்குள் சென்று துப்பாக்கி எடுத்து வந்தார்.
அந்த துப்பாக்கியால் கருப்பையாவை இடுப்பு மற்றும் காலில் சுட்டுள்ளார். அவர் சுடும்போது ராஜாகண்ணுவும் தடுக்க முயற்சித்ததால், அவருக்கும் கையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மலைப்பகுதியில் இருவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை கிளப்பி உள்ளது.